Saturday, January 22, 2022

வாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி – விக்ரமாதித்தன் கதை


 
காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.


அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர். இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.


ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். அப்போது ராமன், தான் இந்த ஒரு மாத காலம் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும், எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான். இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.


மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும், பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதை பற்றி அறிவுரை கூறியதாகவும் கூறினான். இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை கேட்க விரும்பினர்.


சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி. “விக்ரமாதித்தியா அந்த துறவி கௌதமனை வாரிசாக தேந்தேடுக்க கூறியது ஏன்? எனக் கேட்டது வேதாளம்.


“ராமன் ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது. அம்மக்களிடம் உள்ள ஏற்ற, தாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது. மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக் கூடிய சூழ்நிலை தான் அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்” என விக்ரமாதித்தியன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !