Showing posts with label பழமொழி/Pazhamozhi / பொருள் Tamil Meaning. Show all posts
Showing posts with label பழமொழி/Pazhamozhi / பொருள் Tamil Meaning. Show all posts

Thursday, March 14, 2019

ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?

பொருள்/Tamil Meaning 
ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?

Transliteration 
Orunal kootthukku miicai seraikkavaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம். சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.

பொருள்/Tamil Meaning 
 ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

Transliteration 
Kotukkiratu ulakkuppal, uthaikkiratu palluppoka.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

பட்டும் பாழ், நட்டும் சாவி.

பொருள்/Tamil Meaning 
நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று.

Transliteration 
Pattum paal, nttum savi.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இது ஒரு மிக அழகான பழமொழி. இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ல கதிர்களுக்குச் சாவி என்ற பெயர் எத்தனை வளமானது! chaff என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம். சாவி என்றால் வண்டியின் அச்சாணி என்று இன்னொரு பொருள் உண்டு.அதுபோலப் பட்டு, நட்டு என்ற சொற்களைப் பெயர்ச்சொற்களாக இன்று நம் கவிதைகளிலேனும் பயன்படுத்துகிறோமா? பாடுபட்டு, நாற்று நட்டு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும். அல்லது பட்டு என்றால் பட்டுத் துணி, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம். இந்த வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக நம் உழவர்கள் பயன்படுத்துவதில் எவ்வளவு நயம் பாருங்கள்!

அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.

பொருள்/Tamil Meaning 
அப்பாசுவாமியை விட ஒரு கஞ்சனை நீங்கள் பார்த்ததுண்டா?

Transliteration 
Appasuvamikkuk kalyanam, avaravar veettil sappadu, kottumelam kovilile, verrilai paakku kataiyile, cunnampu soolaiyile.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அந்தக் காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது!

இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.

பொருள்/Tamil Meaning 
கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று சொல்லுவது

Transliteration 
Ittavarkal, tottavarkal kettavarkal, ippotu vantavarkal nallavarkal.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள். இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.

பொருள்/Tamil Meaning 
நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான்.

Transliteration 
Ititthaval putaitthaval inke irukka, ettip parttaval kottikkontu ponal.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.

பொருள்/Tamil Meaning 
இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன!

Transliteration 
Oru kuruvi irai etukka, onpatu kuruvi vaai tirakka.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.

கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

பொருள்/Tamil Meaning 
ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.

Transliteration 
Kala mavu ititthaval pavi, kppi ititthaval punniyavathiyaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை இது! வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்திதான்.

உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.

பொருள்/Tamil Meaning 
வடநாட்டில் இருந்து வந்த பைராகி சந்நியாசி மேசையில் அமரவைக்கப் பட்டு உணவால் நன்கு உபசரிக்கப் பட்டுத் தின்பான். உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டியாகிய நான் வாங்குவதோ வசவும் உதையும்.

Transliteration 
Unpaan tinpaan pairaki, kutthukku nirpaan veeramushti.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பைராகி என்பவன் சிவனை வழிபடும் வடநாட்டுத் துறவி. வீரமுஷ்டி என்பவன் வாள் முதலிய ஆயுதங்கள் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. ’பைராகி’ என்றதற்கு பதில் ’சிவ பிராமணன்’ என்றும் பழமொழியில் வழக்குள்ளது.

உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.

பொருள்/Tamil Meaning 
பொதி சுமக்கும் ஓர் எருதுடன் அடை மழையில் கால்கள் இறங்கும் சேறு நிறைந்த சாலையில் செல்வது போன்ற சிரமம் (இதற்குத்தானா)?

Transliteration 
Ulai (allatu ceru) valiyum, atai malaiyum, pothi eruthum taniyumaay alaikirathupol.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 இந்தப் பழமொழியின் கவிதை தீட்டும் ஓவியம் ஓர் ஆற்புதம்! ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, அதுவும் ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. எதற்காக இது? இந்தச் சிறு லாபத்திற்காகவா?

எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?

பொருள்/Tamil Meaning 
Transliteration 
Elluthan ennaikkuk kaaykiratu. Elip pulukkai ennattukku kaaykiratu?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.

பொருள்/Tamil Meaning 
பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல.

Transliteration 
Ontikkaran pilaippum vantikkaran pilaippum onru.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள்.

கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.

பொருள்/Tamil Meaning 
ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.

Transliteration 
Kottik kotti alanthalum kuruni pathakku aakathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால். ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால் முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா? குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.

Tuesday, March 12, 2019

ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி

பொருள்/Tamil Meaning 
ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?

Transliteration 
aanaiyai (allatu malaiyai) mulunkina ammaiyarukkup poonai suntaanki.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான். அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

பொருள்/Tamil Meaning 
உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?

Transliteration 
Ullooril onaan pitikkathavan, utaiyaarpalaiyam poi utumpu pitippanaa?





தமிழ் விளக்கம்/Tamil Explanation
உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.

சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?





பொருள்/Tamil Meaning 
சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?

Transliteration 
sorril kitakkira kallai etukkamaattathavan nganatthai eppati arivan?






தமிழ் விளக்கம்/Tamil Explanation
சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி. 

கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.

பொருள்/Tamil Meaning 
ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல.

Transliteration 
Kalutaikkup paratecam kutticcuvar.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.






வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?

பொருள்/Tamil Meaning 
மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.

Transliteration 
Vantatai varappatuttata valakkaattu ramaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அது என்ன வலக்காட்டு ராமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

பொருள்/Tamil Meaning 
முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.

Transliteration 
Cumma kitantha cankai utik ketuttan aanti.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அது கெட்டுவிடும் என்பதல்லவோ இதன் நேரடி விளக்கம்? அல்லது அமைதி நிலவியபோது ஒருவன் வலுச்சண்டைக்குப் போய் அமைதியைக் கெடுத்தானாம் என்பது இன்னொரு செய்தியாகக் கொள்ளலாம். பின்னால் உள்ள கதையை நோக்கிட விளங்கும்.ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்க தோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!பழமொழியின் பின் ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார் என்பது பழமொழியின் இன்னொரு குறிப்பு.








ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

பொருள்/Tamil Meaning 
தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.

Transliteration 
anti makan antiyanal, neram arintu canku uthuvaan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !