Thursday, December 27, 2018

வழி- ஒரு சாதனையின் கதை

சமுதாயத்தில் அடிமட்டத்தைச் சேர்ந்தவன் அவன். 
அவனொரு உழவுக் கூலி. அறுவடை முடிந்த நாட்களில் வயலில் எலிக் குழிகளைத் தோண்டி எலி சேர்த்து வைத்திருந்த தானியங்களை எடுப்பதே அவனது வேலை. கூலி வேலை இல்லாத நாட்களில் வயல்வெளிகளில் வாழும் எலிகள், பெருச்சாளிகளைப் பிடிப்பதே அவனுக்கு வேலையாக இருந்தது. அதுவே அன்றைய உணவு எல்லாம். அவனுக்கு அவன் மனைவி மீது அப்படி ஒரு அன்பு. 
அவர்களுக்கு அந்த வருடம் தான் திருமணம் ஆகிருந்தது. 
ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்தி பெறுவதே இல்லறம். 
எது இல்லை எனினும் அது நிறைவற இருந்தது. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். 

அன்று கடும் வறட்சி. குளங்கள் எல்லாம் வறண்டு கிடந்தது. எங்கும் குடிக்க தண்ணீர் கூட கிடைப்பது கடினமாக இருந்தது. தண்ணீருக்காக மக்கள் நாலாபக்கமும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவன் ஊருக்கு பக்கத்தில் மலை இருந்தது. மலைக்கு அந்த பக்கம் ஊர் இருந்தது. அந்த ஊரில் தண்ணீர் கிடைப்பதாக சொல்லப்பட. மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு கிளம்ப ஆரமித்தார்கள். அந்த பக்கம் மலையை சுற்றிப் போக சரியான பாதை வசதி கூட கிடையாது. மலையை சுற்றி காடுகள் வேறு. எனவே மலை ஏறி இறங்கி மலைக்கு மறுபுறம் பத்து கிலோ மீட்டர்கள் நடையாய் நடந்து தண்ணீர் சுமந்து வந்தார்கள். மற்ற பெண்களோடு சேர்ந்து அவளும் தண்ணீருக்காக மலை ஏற ஆரமித்தாள். ஒரு குடம் நீருக்காக தான் இப்படி ஒரு அலைச்சல். 

அன்றும் அப்படி தான். மலைக்கு மறுபுறம் போய் தண்ணீர் சுமந்து கொண்டு கீழ் வருகையில் கல் இடற, அவள் தலைகுப்புற பள்ளத்தில் விழுந்தாள். நீட்டிக்கொண்டிருந்த கூறான பாறை ஒன்று அவள் தலையில் மோதியது.. மண்டை பிளந்தது. “அம்மா”வென அவளின் அலறலில் மலை அதிர்ந்தது. ரத்தம் குபுகுபுவென கொட்ட ஆரம்பித்தது. உடன் வந்த பெண்களில் சிலர் அவளை நோக்கி போய் ரத்தத்தை நிறுத்த துவங்க. இன்னொரு பெண் அவனுக்கு விவரத்தை சொல்ல ஓடி வந்தாள். 

மழை பெய்யாததால் அவனுக்கு சரியான வேலை இல்லை. வேலை எதுவும் இல்லாத காரணத்தால் சுருண்டு படுத்துக்கிடந்தான். ஓடி வந்தவள் விவரத்தை சொல்ல, அவன் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடினான் மலையை நோக்கி. சிறு கும்பல் கூடி இருந்தது. அவள் மயங்கிக் கிடந்தாள். அவன் அவளைப் பிடித்துக் கொண்டான். ரத்தம் நிற்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது. அவன் அலறினான். கூடி இருந்தவர்களைக் கண்டு கைகளைக் கூப்பினான். 
“அய்யோ நிறைய ரத்தம் போகுதே. அய்யா யாராவது உதவுங்க. இவள எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகணும்” ஏதாவது செய்யும்படி வேண்டினான். கதறினான். 
ஊர் கலந்து ஆலோசித்தது. மலைக்கு அந்தபுறம் இருபது கிலோமீட்டர் தூரத்தில் தான் மருத்துவமனை இருந்தது. தூக்கிக் கொண்டு போக முடியாததால், மாடுகள் பூட்டி மலையைச் சுற்றிப் போவதென முடிவு செய்யப்பட்டது. 

ஐம்பது கிலோமீட்டர்கள்..!! மலையைச் சுற்றிப் போக முப்பது கிலோ மீட்டர்கள். அங்கிருந்து மருத்துவமனை போக இருபது கிலோ மீட்டர்கள்.! 

மாட்டு வண்டி முடிந்தவரை விரைவாக சென்றது. போகும் வழியெங்கும் அவளின் ரத்தம் வழிந்து கொண்டே போனது. முப்பதாவது கிலோமீட்டரில் அவள் உயிர் பிரிந்தது போனது. அவளது கை அவனது கையை இருக்க பிடித்தபடி இருந்தது. அவளது கண்களில் அவனைப் பாதியில் விட்டுப்போன அவநம்பிக்கை இருந்தது. அது அவனுக்கு, அவர்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவர் சோதித்து விட்டு, 

“யோவ் அறிவில்ல உங்களுக்கு. இவ்வளவு பலமா காயம்பட்டும் இவ்வளவு தாமதாமாவா கொண்டு வருவாங்க? உசுரு எப்போவோ போய்டுச்சு. சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்.” 

அவன் அவள் மீது உரண்டு புரண்டு கதறினான். சுற்றிருந்த கூட்டம் கண் கலங்கியது. 

அவளைக் கொண்டு போன அதே வண்டியில் அவளின் உயிரற்ற சடலம் திரும்ப கொண்டுவரப்பட்டது. “அந்த மலை மட்டும் இல்லனா சீக்கிரம் கொண்டு போயிருக்கலாம்ல.” உடன் வந்தவர்கள் பேசிக்கொண்டு வர அவன் அமைதியாய் அவளுடைய சடலத்தை வெறித்தான். வரும் வழியெங்கும் அவன் மலையையே பார்த்துக் கொண்டு வந்தான். 

அவள் உடலை எரிமூட்டி வீடு வந்து சேர்ந்த பின்பும், ஒரு வாரம் அவன் மலையையே வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

பின்னொரு நாளில், அவன் உளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். 

“ப்ளின்க் ப்ளின்க்” மலைப் பாறைகளை அவன் உடைக்கத் துவங்கினான். 
பாதை போடுவதற்காக. 

ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்தது. 

“ஒத்தப்பயலா மலையை குடஞ்சு பாதை தோண்டுறானமே இந்த பய.? 

“பொண்டாட்டி மலைல இருந்து விழுந்து செத்ததுல இருந்து இந்த பயலுக்கு கிறுக்கு பிடிச்சுருச்சு. மலைய ரெண்டா உடைச்சு பாதை போட போறானாமே? நடக்குற காரியமா இது?” ஊர் சிரித்தது. 

அவன் மலையை உடைப்பதை வேடிக்கை பார்க்கப்போய் அவனை ஏகடியம் செய்தது. அவனுடைய உறவினர்கள் எல்லோரும் அவனை “ஏலேய், ஏன்டா வீண் வேல பாத்துட்டு இருக்க ஒத்த மனுசனால அவ்ளோ பெரிய மலைய குடைஞ்சு பாதை போட முடியமா? இத விட்டுட்டு வேற சோலிய பாக்க கிளம்புடா” என்றார்கள் எல்லோருக்கும் அவனது “ப்ளின்க் ப்ளின்க்” உளி சத்தமே பதில் சொன்னது. அவர்களின் கண்களுக்கோ அந்த மலை தெரிந்தது. அந்த பாறைகள் தெரிந்தன. அவனுக்கோ அதற்க்கு அப்பால் உள்ள வெளிகள் தெரிந்தன. அவன் சாமி வந்தது போல அந்த மலையை தொடர்ந்து கொத்திக் கொண்டிருந்தான். 

வருடங்கள் உருண்டோட ஆரமித்தன. ஆனால் அந்த “ப்ளின்க் ப்ளின்க்” சத்தம் ஒருநாள் கூட நிற்கவில்லை... தொடர்ந்து கேட்டது. ஆரம்பத்தில் அவனை கேலி செய்தவர்கள் கூட நாளாக நாளாக அந்த மலை கொஞ்ச கொஞ்சமாக உடைவதைக் கண்டு அவனுக்கு உளியும் சுத்தியலும், உணவும் வந்து கொடுத்துப் போனார்கள். 
அவன் எல்லாம் மறந்து வெறிபிடித்து, அந்த பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தான். இன்னும் வருடங்கள் கடந்து போயின. 

“ப்ளின்க் ப்ளின்க்” அந்த மலையின் கடைசி முனையையும் அவன் உடைத்து தகர்த்தான். அவன் இப்பொழுது அவர் ஆகிருந்தார். மலையை உடைக்க ஆரம்பித்த பொழுது அவனுக்கு 24 வயது. முடித்த பொழுது அவருக்கு வயது 46. 22 வருடங்கள் அவர் அந்த பாறைகளை உடைக்க செலவிட்டார். 25 அடி உயரம் 30 அடி நீளம் 360 அடி நீளத்தில் அவர் அந்த மலையை குடைந்து பாதை போட்டார். அன்று 50 கிலோ மீட்டர்கள் மலையை சுற்றி போனவர்கள் இன்று வெறும் பத்து கிலோமீட்டர் மீட்டரில் பக்கத்து நகரத்தை அடைந்தார்கள். 
அப்பகுதி மக்கள் அவரைக் கொண்டாடினார்கள். அவர் எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தார். மலையை தன்னந்தனியாக உடைத்த அந்த மாவீரன். பெருஞ்சிற்பி, அந்த மலையை குடைந்து பாதை அமைத்த பின்னும் 26 வருடங்களாக அரசு ஒரு சாலை கூட போடவில்லை. 

“எங்க கிட்ட அனுமதி வாங்காம மலையை உடைச்சுருக்காரு. எங்களால ஒன்னும் பண்ண முடியாது என்றது.” வனத்துறை 

அவர் அந்த மாபெரும் சாதனையை செய்த பின்னும், 26 வருடங்கள் கூலி வேலை செய்தே செத்துப் போனார். அரசு எந்தவிதத்திலும் அவருக்கு உதவில்லை. அவர் சாவதற்கு முன் யாரோ அவரிடம் கேட்டார்கள். 

“உங்க மனைவி மேல இருக்குற பிரியத்துல தான் இதை செஞ்சிங்களா?” அவர் கேட்டவனை உறுத்துப் பார்த்துவிட்டு 

“என் மனைவி மேல எனக்கு காதல் இருக்குதான். ஆனா என் மனைவிக்காக நான் இதை பண்ணல. என் மனைவிய போல வேற யாரும் சரியான சமயத்துல உதவி கிடைக்காம செத்துட கூடாதுன்னு தான் இதை பண்ணேன். நான் என்ன பண்ணேன்னு மக்களுக்குத் தெரியும். அரசாங்கம் பாராட்டும் விருது கொடுக்கும்னு நான் இத பண்ணல. அனுமதி இல்லாம மலை குடைஞ்சேன்னு என்ன தண்டிச்சாலும் பரவயில்ல. வருத்தபட நான் எந்த கெட்டவிசயத்தையும் செய்யல. நல்ல விசயத்தைத்தான் செஞ்சுருக்கேன். அது போதும் எனக்கும்.” 

அவர் ஒருநாள் இறந்து போன போது, எல்லோரும் ஓடிவந்தார்கள். கதறிக் கதறி அழுதார்கள்.. 
இருந்த போது அவரை பழித்த அரசு அதிகாரிகள் கூட ஓடி வந்தார்கள். 
அவர் உடல் அரசு மரியாதைப்படி அடக்கம் செய்யப்பட்டது. 
அவர் இறந்து எத்தனையோ வருடங்கள் ஆனாலும், இன்றும் கூட அந்த மலையில் அந்த கிழவனின் “ப்ளின்க் ப்ளின்க்” உளிச்சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. 



(என் குறிப்பு) இது ஒரு உண்மைக் கதை அந்த “அவன் என்ற அவர் யார் என அறிய விரும்புபவர்கள் கூகுளில் “தசரத் மான்ஜி” என தேடுங்கள்.. Dashrath Manjhi

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !