Wednesday, December 19, 2018

என் சுதந்திரம் உங்க கையில

டில்லியின் அந்த பரபரப்பான சிக்னலில் வரிசையாகக் கார்கள் நின்றவுடன் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்தது. 

இன்னும் ஒரு சிக்னல் தான். இந்தியா கேட் போயிடலாம். நாளை மறு நாள் சுதந்திர தினம். அதனால லைட் அலங்காரம் இந்தியா கேட்லேருந்து ராஷ்டிரபதி பவன் வரைக்கும் அழகா இருக்கும். 

பேரனிடம் சொல்லிக் கொண்டே தன் டிரைவர் சீட் கண்ணாடியைக் கீழிறக்கி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் சோமசுந்தரம். 

'குப்பாரா லேலோ'. சிறு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தம்பதியரை தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தான் பலூன் வியாபாரி ஹிந்தியில். 

அவனுக்குப் பின்னால் 'கிலோனா லேலோ' என தேசியக் கொடி வரையப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் விற்பவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். 

முன்புறக் காரிலிருந்த பெண்ணிடம் 
மோக்ரா மோக்ரா என மல்லிகை விற்றுக் கொண்ட்டிருந்தாள் பூக்காரி. 

அத்தனை வியாபாரிகளுக்கும் நடுவில் ஒரு குரல் மட்டும் கணீரென ஒலித்தது. அது பத்து வயது மதிக்கத்தக்க தொப்பி விற்கும் சிறுவனின் குரல். 

வாங்குங்க வாங்குங்க என் சுதந்திரம் உங்க கையில. வில பத்தே ரூபா தான். தெளிவான ஹிந்தியில் கூவிக் கொண்டிருந்தான். அவனின் வித்தியாசமான அறை கூவலினால் ஈர்க்கப்பட்டு ஓரிருவர் அவனைக் கார் அருகே அழைத்து வாங்குவது தெரிந்தது. 

சிக்னல் விழுந்ததால் கிளம்ப வேண்டிய நிர்பந்தம். ஆனால் ஏனோ மனம் மட்டும் சிக்னல் சிறுவனிடமே இருந்ததால் சிறிது தூரத்தில் இருந்த சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு பேரனுடன் சிக்னலுக்கு வந்தார் சோமசுந்தரம். 

சுதந்திரப் போராட்டத் தியாகி சண்முகத்தின் மகனானா சோமசுந்தரம் அந்த சிக்னல் சிறுவனுக்கு ஹிந்தியில் அறிவுரை கூற ஆரம்பித்தார். 

இந்தியாவுக்குக் கெடச்ச சுதந்திரம் எல்லாருக்கும் பொது தம்பி. அதனால அத ஒரு பொருள் போல நெனச்சி நீ சொல்றது எனக்கு சரியா படல. உன்னோட சுதந்திரத்த நாங்க எப்போ எடுத்தோம். திருப்பிக் கொடுக்க. 

ஏதோ நீ என்னோட பேரன் மாதிரி இருக்கறனால இத சொன்னேன். நீ சாதாரணமா தொப்பி தொப்பின்னே விக்கலாம். எல்லாரும் வாங்குவாங்க. 

நானும் வேணும்னாலும். என் பேரனுக்காக ஒரு தொப்பி வாங்கிக்கிறேன். 

எதையுமே காதில் வாங்காதது போல் அந்த சிறுவன் பேரன் சமீரைப் பார்த்து 
பிரதர் என் பேரு வைபவ். என் கிட்ட உள்ள இந்த கடைசி ஆறு தொப்பியையும் நீங்களே வாங்கிட்டீங்கன்னா எனக்கு நாளைக்கு ஒரு நாள் லீவு கெடைக்கும். நான் நிம்மதியா தூங்குவேன், குருத்வாரால பண்டாரா(அன்னதானம்) சாப்பிடுவேன், இந்தியா கேட் ல போய் லைட் அலங்காரமெல்லாம் பாத்துட்டு வருவேன். 

என்னோட வீடு அதோ தெரியுதுல்ல. அந்த பிரிட்ஜுக்கு கீழ உள்ள பிளாட்பாரம் தான். நான் இப்போ பூராத்தையும் விக்கலேனா நாளைக்கு காலேல இந்த சாமான் கொடுக்கற ஏஜெண்ட் ஐயா என்னய மறுபடி வேலைக்கு வரச் சொல்லிடுவாறு. அதனால தான் நான் அப்டி சொல்லி வித்தேன். உங்க தாத்தா சொன்னது எனக்கு புரியல. 

நினைச்ச நேரத்துக்கு நினைச்ச இடத்துக்கு போக முடிந்த பேரன் சமீருக்கு இருவரின் பேச்சும் புரியவில்லை. 

தாத்தா இவன் கிட்ட உள்ள எல்லா தொப்பியையும் நாமளே வாங்கிக்கல்லாம். நூறு ரூபாய் கொடுத்தார் தாத்தா. 

மீதி நாப்பது ரூபாய்க்கு நாளைக்கு இந்தியா கேட்ல பானி பூரி சாப்பிடு. சூப்பரா இருக்கும். நான் இப்போ சாப்பிட போறேன். என்ஜாய் யுவர் ஹாலிடே பிரதர். சொல்லிவிட்டு திரும்பி காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சமீர். 

சரிபிரதர் திரும்பவும் சிக்னலில் சந்திப்போம். சந்தோஷத்துடன் நடந்தான் வைபவ். 

சுதந்திரத்தின் புதிய அர்த்தத்தைப் புரிந்தவராக பேரனுடன் நடந்தார் சோமசுந்தரம் தாத்தா.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !